கிருஷ்ணகிரி, ஏப். 20 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூரில் பெருமாள் கோயில் வளாகத்தில் அட்சய திருதியை தினத்தில் குழந்தை திருமணம் வேண்டாம் என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
கிராமிய பெண்கள் முன்னேற்ற அறகட்டளை சார்பில் ஏற்பாடு செய்யபட்டு இருந்த இந்நிகழ்ச்சியில் குழந்தை திருமணம் வயது பற்றியும் அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் – 2006 ன் படி தண்டனைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல குழும உறுப்பினர் பாக்கியலட்சுமி, தொண்டு நிறுவன இயக்குநர் அலமேலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா மற்றும் கள பணியாளர்கள், ஊர் பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரிமாசங்க பொறுப்பாளர்கள், கோயில் பூசாரிகள், முன்னாள் இராணுவ வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமூக சேவகர்கள், குழந்தைகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். இறுதியில் குழந்தை திருமணம் இல்லாத பஞ்சாயத்தாக உருவாக்கிட உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. கூட்டம் முடிவில் கள பணியாளரான வரலட்சுமி நன்றி கூறினார்.



