தருமபுரி, மே 01 –
தருமபுரி மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன என்று தேர்தல் பொது பார்வையாளர் ஹீரா லால் கூறினார். தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23 – ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.
மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ஹீராலால் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் பசுமை தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில் வாக்குப்பதிவின்போது பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதன்படி தொகுதி வாரியாக தருமபுரியில் 32, பாப்பிரெட்டிபட்டி 34, அரூரில் 6, பென்னாகரத்தில் 1, பாலக்கோட்டில் 3 என மொத்தம் 76 பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் 960 வாக்குச் சாவடிகளில் 100 மீட்டர் சுற்றளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முழுமையாக தவிர்க்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் முதல் முறை வாக்களித்த இளம் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதே போல் 2,930 விதை பந்துகள், 5,375 விதை பென்சில்கள் மற்றும் விதை பேனாக்கள் வாக்குப்பதிவுகளின் போது வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களை பயன்படுத்த அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இதே போல் பசுமை வாக்குப்பதிவு தொடர்பாக பல்வேறு செயல்பாடுகள் மூலம் பொது மக்களுக்கு இடையே விழிப்பு ஏற்படுத்தப்பட்டது. தண்ணீர், தாவரங்கள், நிலம் ஆகிய அடிப்படை வாழ்வாதார காரணிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.
மாவட்டத்தில் பசுமை தேர்தலில் நடத்த எதிர்பார்ப்பதை விட நல்ல ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகள், விதை பந்துகள், விதை பேனாக்கள் மற்றும் விதை பென்சில்கள் நிலங்களில் செடிகளாக வளரும் போது மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.



