மார்த்தாண்டம், மார்ச் 30 –
விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட மேல்புறம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா அலுவலகம் திறப்பு விழா ஒன்றிய தலைவர் சரவணவாஷ் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட தலைவர் ஆர் டி சுரேஷ், பொது செயலாளர் நந்தினி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், தர்மராஜ், விஜயதரணி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி அலுவலக செயல்பாட்டை துவங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயதரணி கூறியதாவது:-
கேள்வி : திமுக மூன்று அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை இதை எப்படி பார்க்கிறீர்கள்
பதில் : திமுக பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்கிறது என்பதைதான் பார்க்க முடிகிறது.
இன்று அவர்கள் அமைச்சர் பலர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிறைந்து இருக்கும் சூழ்நிலையில் அனைத்து அமைச்சர்களும் குற்றச்சாட்டுக்கு உட்படவர்களாக மாறி இருக்கிறார்கள். மக்களிடம் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த அமைச்சர்கள் ஆகட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த அமைச்சர்கள் ஆகட்டும் இது போன்ற பல்வேறு அமைச்சர்களை தேர்தலில் நிறுத்தாமல் இருப்பது நன்மை என்று கருதும் அளவில் திமுக சரிந்து இருக்கிறது என்பது உண்மை.
சட்டம் ஒழுங்கு சூழ்நிலை மிக மோசமாக தமிழகத்தில் இருந்து கொண்டு இருந்தது. சிறுவர்கள், சிறுமிகள் பாதிக்கப்பட்ட வழக்குகள் 125 சதவீதமாக உயர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 55 சதவீதம் உயர்ந்து இருக்கும் சூழ்நிலையில் ஆளும் கட்சிக்கு எதிரான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த அளவில் இருந்த அமைச்சர்களை மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கேள்வி : ஜோதிமணி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் தலைவர்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு கூறியுள்ளாரே?
பதில்: காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன என்பது வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதை நாங்கள் எல்லாம் சொன்ன நேரத்தில் நம்பாத காங்கிரஸ் கட்சியினர் இப்போதாவது நம்பட்டும். அங்கு நடப்பதை பாராளுமன்ற உறுப்பினரே வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த அளவுக்கு விற்பனை பொருளாக காங்கிரஸ் கட்சி மாறி விட்டது.
கேள்வி : திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் எந்த அளவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்? எந்த அளவிற்கு ஈடு கொடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக மாறியிருக்கிறது. தற்போது திமுக வெளியிட்டு உள்ள பட்டியல் தெள்ள தெளிவாக எதை கூறுகிறது என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாமக, அமமுக, அனைத்து கட்சி இணைந்து போட்டியிடும் வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற போகிறார்கள் என்று சமிக்கையை அளித்து இருக்கிறது. உறுதி செய்யப்பட வெற்றியாக மாறி இருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி.
கேள்வி : விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று சீமான் பேசி இருக்கிறாரே?
பதில்: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட கூடாது என்பது எங்களின் கருத்துமாக இருக்கிறது. சரியான மனு கொடுத்து இருக்குமேயானால் எல்லோரும் அனுமதி கொடுப்பது போல அவருக்கும் அனுமதி கொடுப்பது நியாயமாக இருக்கும். தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தும், பரப்புரையில் இருந்தும் யாரையும் ஒதுக்கி வைப்பது ஜனநாயகம் அற்ற செயலாக பார்க்கப்படும் என பேட்டியில் கூறினார்.



