நாகர்கோவில், மார்ச் 28 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியிலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு சுங்கான்கடை செயின்ட் சேவியர் கத்தோலிக் பொறியியல் கல்லூரியிலும், பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு திருவட்டார் எக்ஸெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு பம்மம் சேக்ரட் ஹார்ட் பள்ளியிலும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இவற்றை குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பயிற்சியில் 8309 அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வீ பேட் கருவிகள் கையாள்வது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்புகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, குளச்சல் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கலைமதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் செந்தூர் ராஜன், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் ஈஸ்வரநாதன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் புஷ்பாதேவி, சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள், அலுவலர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



