நாகர்கோவில், மார்ச் 26 –
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அரசு பேருந்துகளில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பேருந்துகளில் எல்.இ.டி திரை வாயிலாக காட்சிப்படுத்துவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்: அரசு போக்குவரத்துகழகம் நாகர்கோவில் கோட்டம் சார்பில் சுமார் 400 அரசு பேருந்துகளில் எல்.இ.டி பொருத்தப்பட்டு, வாக்குரிமை பெற்ற அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த திரையிடப்பட்டு பயணிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, பயணிகள் பேருந்துகளில் ஏறும் படிகட்டுகள் அருகே தேர்தல் விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டு, பயணிகளிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த டிஜிட்டல் தளம் பயன்படுத்தப்படுகிறது என கூறினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன், பயணிகள், போக்குவரத்து பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



