மார்த்தாண்டம், ஆக. 11 –
குமரி மாவட்டத்தில் முறைகேடான வகையில் கனிமங்களைக் கொண்டு செல்வதை தடுக்க மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடுமையான நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இந்த நிலையில் தக்கலை போலீசார் நேற்று மாலை கல்லுவிளை எடை மேடை அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியில் எம் சாண்ட் இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை நிறுத்தி அதன் டிரைவர் திக்குறிச்சியை சேர்ந்த ஜோஸ் பென்சிகர் என்பவரிடம் அனுமதி சீட்டு மற்றும் எடை பரிசோதனை ரசீதை கேட்டனர்.
லாரியிலிருந்து இறங்கிய டிரைவர் அவற்றை தருவதாக கூறிவிட்டு செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வேகமாக கார் ஒன்று வந்தது. அந்த காரில் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவர் ஜோஸ் பென்சிகர் தப்பி ஓடி விட்டார். போலீசார் பிடிக்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து உடனடியாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் காவல் நிலையத்தில் டாரஸ் லாரியை ஒப்படைத்தனர்.
இந்த புகார் தொடர்பாக தக்கலை போலீசார் விசாரணை நடத்தி டிரைவர் ஜோஸ் பென்சிகர், லாரி உரிமையாளர் ரிஜோ மற்றும் டிரைவரை தப்ப உதவிய காரின் உரிமையாளர் மற்றும் அதன் டிரைவர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முறைகேடாக எம்சாண்ட் கடத்தி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


