மார்த்தாண்டம், பிப். 27 –
நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேனம்விளை அரசு தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் விஜய்வசந்த் எம்பியிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து 2 வகுப்பறை கட்டிடம் கட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாடு திட்டத்தில் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வகுப்பறைகள் பணிகள் முடிவடைந்ததையடுத்து திறப்பு விழா நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவில் நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா தலைமையில், நெய்யூர் துணைத்தலைவர் பென்டேவிட் முன்னிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி, சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். திறப்பு விழாவுக்கு வருகை தந்த விஜய்வசந்த்
அவர்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பள்ளி சார்பாக சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், ஒ. பி. சி பிரிவு மாநில செயலாளர் ஸ்டார்வின், பொறுப்பு தலைமையாசிரியர் சுரேஷ், வட்டார வள மேற்பார்வையாளர் ஜான்சன், வட்டார வள பயிற்றுனர் வனஜா, ஆசிரியர் சகாயராணி, சேனம்விளை 9 வது வார்டு கவுன்சிலர் ஷிலா, உட்பட ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



