நாகர்கோவில், ஜன. 25-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). டிரைவர். இவரது மனைவி கிரேசி (31). இவர் திருவாரூர் மாவட்டம் திருக்காண்டிஸ்வரர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இருவரும் விருந்து நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் பகுதியில் உள்ள சதீஷ்குமாரின் சித்தி வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் 22ஆம் தேதி மாலையில் சதீஷ்குமார் குடிபோதையில் அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார். இதை பார்த்த சித்தி சதீஷ்குமாரை பைக்கில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் வராமல் அந்த பகுதியில் உள்ள மோட்டார் அறையில் சதீஷ்குமார் படுத்துக்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று காலை வரை சதீஷ்குமார் எழும்பவில்லை. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சதீஷ்குமாரை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் வரும் வழியிலே சதீஷ்குமார் இறந்ததாக தெரிவித்தனர்.
சதீஷ்குமார் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்பது உடனடியாக தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இறந்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதையடுத்து அவரது மனைவி கிரேசி நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


