நாகர்கோவில், மார்ச் 25 –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி, இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 15,10,500 வாக்காளர்கள் 1914 வாக்குச்சாடி யைமங்களில் வாக்களிக்க உள்ளார்கள். தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சியானது 28.03.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு நாகர்கோவில் (ஆலம்பாறை) பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியிலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு நாகர்கோவில் ஆயுதபடை சாலையில் அமைந்துள்ள புனித அல்போன்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியிலும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு திருவட்டார் எக்ஸ்சல் சென்ட்ரல் பள்ளியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு மார்த்தாண்டம் பம்பம் பகுதியில் உள்ள திரு இருதய இண்டர்நேஷனல் பள்ளியிலும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்களுக்கு கருங்கல் பெத்தலகேம் பொறியியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.
மேல்குறிப்பிட்ட 6 இடங்களில் நடைபெறவுள்ள தேர்தல் முதற்கட்ட பயிற்சியில் சுமார் 9000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். எனவே வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் ஜனநாயக கடமையினை ஆற்றும் வகையில் பயிற்சி வரும்பொழுது தங்களது வாக்காளர் அடையாள அட்டை தவறாமல் எடுத்துவந்து, படிவம் 12டி பெற்று, உங்களுடைய தபால் வாக்குகளை பதிவுசெய்து, கன்னியாகுமரி மாவட்டம் வாக்களிப்பதில் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.



