இராமநாதபுரம், பிப். 26 –
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் மற்றும் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பனை மரம் மாநில மரமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைமரங்கள் அதிகமாக இருந்தது தற்போது மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதியின்றி வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு மரம் வெட்டப்பட்டால், ஈடாக 10 பனை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்பது விதி. பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி அவசியம்.
அனுமதியின்றி வெட்டப்படும் பனை மரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வெட்டுபவர்கள் மீது சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


