நாகர்கோவில், பிப்ரவரி 09 –
2026 தேர்தல் நெருங்கி விட்டது. பலரும் கட்சி வேஷ்டிகளை கட்ட ஆரம்பித்து விட்டார்கள். தனக்கும் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் தொலைந்து போன ஆட்கள் கூட களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் யார்? கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் நிலவரம் என்ன? தேர்தல் கூட்டணி எந்த விதத்தில் அமையும் என்பதை மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவருமான முத்துக்குமார் தொடர்ந்து விவரிக்க இருக்கிறார்.
அவர் தற்போது கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மனாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் 2021 தேர்தலில் திமுகவும், அதிமுகவும் தலா ஒரு இடத்தையே பெற்றுள்ளது. மீதியுள்ள நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும், ஒரு தொகுதியை பாஜகவும் கை பற்றியது. 2026 தேர்தல் முடிவுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்படி இருக்கும் என்பதை பலரும் உற்று கவனித்து வருகிறார்கள்.
நாகர்கோவில் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகியுள்ள எம்.ஆர். காந்தி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா? என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது. வயது மூப்பின் காரணமாக பாஜக வில் இளைய தலைமுறையினருக்கு தொகுதியை விட்டுக் கொடுக்கலாம் என்கின்றனர் சிலர். இல்லை, இல்லை. காந்தியாரே மீண்டும் போட்டியிட உள்ளார் என வேறு சிலரும் சொல்வதை கேட்க முடிகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் கூட இந்த தொகுதியில் போட்டி யிட தயாராக இருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் பொன்னார் போட்டியிட வேறு தொகுதி காத்திருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர், இந்நாள் எம்எல்ஏ வான தளவாய் சுந்தரத்தை வீழ்த்துவதற்கு அதிமுகவினர் பலருமே எதிர் வேலை செய்து வருவதாக தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட முன்னாள் மாவட்ட செயலாளர் அசோகன், தளவாய் சுந்தரத்திற்கு எதிராக ஒரு வீடியோ பதிவை வலை தளங்களில் பரவ விட்டுள்ளார். அந்த வீடியோ அதிமுகவினரின் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் பிரின்ஸை தோற்கடிப்பதற்கு பல முனைகளில் எதிராக செயல் பட தொடங்கியுள்ளனர். இந்த முறை அதிமுக தரப்பில் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்கிறார்கள் அரசியல் கருத்தாளர்கள். அதிமுகவில் நாஞ்சில் வின்சென்ட், பச்சைமால், போன்றோர் சீட் தலைமையிடத்தை நாடி உள்ளதாக தகவல். மேலும் திமுக கூட்டணிக்கு எதிராக தவெக தரப்பிலும் பலத்த வேட்பாளரை நிறுத்த போவதாக தகவல். ஜேப்பியாரின் மகள் டாக்டர் மரியசீனா என்பவர் களத்தில் இறங்கி வேலை செய்து வருவதாகவும் நம் காதுகளுக்கு செய்திகள் வந்துள்ளன. அரசியல் அனுபவம் இல்லாத மரியசீனா தேர்தல் களத்தில் தாக்கு பிடிப்பாரா என்பது சந்தேகம்தான்.
பத்மனாபபுரம் தொகுதியில் அமைச்சர் மனோதங்கராஜை வீழ்த்த பாஜக முனைப்புடன் செயல் படுவதாக தகவல்கள் கசிந்துள்ளது. குளச்சல் தொகுதியை அதிமுகவுக்கு கொடுத்து விட்டு பத்னாபபுரத்தில் பாஜக போட்டியிட ஆயத்த வேலைகள் நடந்து வருகிறது என்று முனுமுனுத்து கொண்டிருப்பதை கேட்க முடிந்தது. அதுவும் பாஜக வேட்பாளராக பொன்னாரே பெரும் பாலும் இருக்க கூடுமாம். பொன்னாருக்கு சொந்த செல்வாக்கு வாக்குகள் 30 ஆயிரத்திற்கு மேல் இருப்பதாக பாஜக வினரே சொல்லுகிறார்கள்.
விளவங்கோடு தொகுதியைப் பொறுத்தவரை காங்கிரஸ் வசம் உள்ள தாரகை கத்பர்ட்டை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி பல முனைகளில் முயன்று வருவதாக தகவல். இதற்காக தினமும் கமலாயத்திற்கு சென்று வருவதாகவும் செய்திகள் பரவியுள்ளன.
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் ராஜேஷ் குமாரை வீழ்த்த கஷ்டம் என்றாலும், அவரது செல்வாக்கை குறைக்கும் வகையில் நான்காவது அணி வேட்பாளர் ஒருவர் செயல்பட்டு வருவதாக தகவல். இருந்தாலும் ராஜேஷ் குமார் தொகுதியை முழுக்க இப்போதே தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டதாக தகவல். இது போன்ற தகவல்களை தொடர்ந்து தர இருக்கிறேன். நன்றி.



