மார்த்தாண்டம், ஜன.25-
கோதையாற்றில் முதலை உலாவி வருவதாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல் பரவியது. இது சம்பந்தமாக வனத்துறைக்கு பல புகார்கள் வந்த நிலையில் இந்த தகவலை வனத்துறையினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் எடுத்த முதலை நடமாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து வனத்துறை அடிக்கடி முதலை உலாவி வந்த இடத்தில் கூடாரம் போட்டு முகாம் அமைத்தது.
தொடர்ந்து அந்த பகுதியில் பிராயிலர் கோழியை கட்டி வைத்து முதலைக்காக காத்து இருந்தனர். டெரிமினல் ட்ரோன் காமிரா மூலமும் தேடி வந்தனர். இறுதியாக கட்டி வைத்த கோழி செத்து போனது. இந்த செயல் சமூக வலைதளங்களில் பல கேலி கிண்டலுக்கு உள்ளானது. தற்போது மீண்டும் முதலை நடமாடிய அடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், மீண்டும் வனத்துறை சிறிய படகின் மூலம் எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கோதையாற்றில் தேடுதல் நடத்தியது.
இந்த நிலையில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் களியல் வனத்துறை அலுவலகத்தில் சென்று, விரைந்து நடவடிக்கை எடுக்க மனு அளித்து விட்டு முதலை அடிக்கடி தென்படும் பகுதிக்கு சென்றார். அப்போது வனத்துறை சார்பில் அமைக்க பட்ட முகாம் கூடாரம் மட்டுமே அங்கு இருந்ததே தவிர வனத்துறையினர் யாரும் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வனத்துறை அலட்சியத்தால் பொதுமக்கள் மற்றும் திற்பரப்பு அருவி சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை அலட்சியத்தை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்.



