மார்த்தாண்டம், ஜன.22-
மார்த்தாண்டம் அருகே வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகன் ஜெரின் (27). சென்னையில் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பாகோடு பகுதி சேர்ந்த எம்பிஏ பட்டதாரி சுபைதா (27) என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது சுபைதாவின் பெற்றோர் சுமார் 75 பவுன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் மற்றும் மணமகனுக்கு 5 பவுன் செயின், 2 பவுன் பிரேஸ்லெட், மாமனார் ஆல்பர்ட்டுக்கு 2 பவுன் பிரேஸ்லெட், ரூ. 2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களை கொடுத்துள்ளனர்.
சில நாட்களில் மாமியார் செல்வி மருமகள் சுபைதாவிடம் கார் வாங்க பணம் வாங்கி வரக் கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.
ஆல்பர்ட் மருமகளுக்கு பேய், ஆவி பிடித்துள்ளதாக கூறி கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தடுத்ததாக தெரிகிறது. மேலும் சுபைதாவின் பெற்றோரின் சொத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்கை கேட்டு வாங்குமாறு மனதளவில் கொடுமைப்படுத்தினார்கள். மேலும் சுபைதாவை கணவர் ஜெரின், மாமனார், மாமியார் சேர்ந்து வீட்டிலிருந்து துரத்திவிட்டுள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த சுபைதா நடவடிக்கை எடுக்க கேட்டு பத்மநாபபுரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட், இளம்பெண் புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டது.
தொடர்ந்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் இளம்பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


