சென்னை, ஜன. 21 –
தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஸ்டார்ட் அப் மற்றும் முதலீட்டுத் தளமான ‘ஸ்டார்ட் அப் சிங்கம்’, தனது இரண்டாவது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 25ஆம் தேதி முதல் ஸ்டார் விஜய், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீசனில் ரூ.100 கோடிக்கும் அதிகமான நிதியைத் திரட்டும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிதி உதவி, தகுந்த வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஆகியவற்றை வழங்குவதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
சீசன் 2-ல், அடுத்த 6 மாதங்களில் 26 எபிசோடுகள் மூலம் 75-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இது தமிழ்நாட்டின் சிறந்த புதிய நிறுவனங்களைத் தொடர்ந்து அடையாளம் காணும் ஒரு முக்கிய களமாக அமையும். முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு இடையே ஆழமான தொடர்பை ஏற்படுத்துதல், நிறுவனங்களை சரியாக ஆய்வு செய்ய உதவுதல் மற்றும் அர்த்தமுள்ள தொழில் ஒப்பந்தங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் இது கவனம் செலுத்தி தொழில் முனைவோருக்காக சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான முதலீட்டு மூலதனத்தை இலக்காகக் கொண்டுள்ளது.
ஆரம்ப நிலை மற்றும் வளர்ச்சிப் பாதையில் உள்ள 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. மேலும் 25-க்கும் மேற்பட்ட நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தனிநபர் முதலீட்டாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். ஸ்டார்ட்அப் சிங்கம் சீசன் 2, நிறுவனர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல் அளிப்பது, நிதி திரட்ட அவர்களை தயார்படுத்துவது மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றில் குமார் வேம்பு, ஹேமச்சந்திரன், பாலச்சந்தர் மற்றும் அருண் ஆகியோரை உள்ளடக்கிய தலைமைக் குழு வழி நடத்த உள்ளது.
அரசுக்கும் ஸ்டார்ட் அப் சூழலுக்கும் இடையிலான இணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது புதுமையான தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள உறுதியை இது மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.



