திருவெண்ணெய்நல்லூர், ஜன. 15 –
சென்னை குன்றத்தூரில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா செல்வதற்காக 13 பேருடன் டூரிஸ்ட் வேனில் சென்று கொண்டிருந்தனர். ஓட்டுநர் ஜெயப்பிரகாஷ் வாகனத்தை ஓட்டினார். அப்போது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூரிஸ்ட் வேன் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற பாக்கியலட்சுமி டிராவல்ஸ் வேனில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் குன்றத்தூரை சேர்ந்த ஜெகன்மோகன் மகன் கிஷோர் (29), ஜெயப்பார்க் மகன் ஜெயபிரகாஷ் (30), செங்குட்டுவன் மகன் பிரதீப் (30), ரமேஷ் மகன் பிரவீன்குமார் (19), மனோகரன் மகன் சந்திப்பு (25), புஷ்பராஜ் மகன் விக்னேஷ்வர் (26), ஏழுமலை மகன் ரமேஷ் (24), ஏகாம்பரம் மகன் அபினேஷ் (20), பாலசுந்தரம் மகன் சரண்குமார் (28), இஷ்டலிங்கம் மகன் பத்மநாபன் (25) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருவெண்ணெய்நல்லூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் சாலையில் இருந்த வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து குன்றத்தூரை சேர்ந்த பிரவீன்குமார் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


