விளாத்திகுளம், ஜனவரி 9 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், எட்டையாபுரம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்டபகுதிகளில் கடந்த 2024 – 2025 ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையை தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் மாதமும் பெய்த அதிக கனமழையினால் மிளகாய், உள்ளி, கொத்தமல்லி, உளுந்து, பாசி போன்ற பயிர்கள் பெரிதளவு சேதம் ஏற்பட்டது.
சாகுபடி செய்த ஒரு விவசாயி எத்தனை ஏக்கர் பயிர் செய்து பாதிப்படைந்தாலும்,அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மட்டுமே வெள்ள நிவாரணம் வழங்கப்படும் எனதமிழக அரசு தெரிவிக்கின்றது, இந்த உச்ச வரம்பை தளர்த்தி பாதிப்படைந்த அனைத்து நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து ஊராட்சி கிராமங்களுக்கும் கண்காணிப்பு கேமரா வேண்டும்.
2024 – 2025 இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டு பாதிப்படைந்த பயிர்களுக்கு இழப்பீடு மற்றும் காப்பீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 மாதங்களுக்கு மேலாக புதூர் பகுதி விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலைமறியல் போராட்டங்கள், காத்திருப்பு போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி புதூர் பகுதி விவசாயிகள் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றாலும், தமிழக அரசு பெரிதாக விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் இன்று விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறிய நிலையில், 70- வதற்கும் மேற்பட்ட விவசாயிகள் புதூர் வேளாண்மை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேளாண்மைதுறை அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், அதிகாரிகளின் பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் புதூர் வேளாண்மை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது குறிப்பிடப்பட்டிருந்த விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், தங்களின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை அரசிடம் ஒப்படைத்து, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை புதூர் பகுதி விவசாயிகள் அனைவரும் புறக்கணிப்போம் என்று கோஷங்களை எழுப்பினர்.



