திருவண்ணாமலை, டிச. 13 –
2025 டிச.5 முதல் 15ம் தேதி வரை, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 63-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் கார்டன் பள்ளி மாணவி ஜெ.என்.நிவிஷா ஸ்ரீ கலந்து கொண்டு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விசாகப்பட்டினம் சிஎம்ஆர்டிஏ மேற்பார்வை பொறியாளர் பவானி சங்கர் சாதனை மாணவிக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினார். மேலும் சாதனை மாணவி ஜெ.என்.நிவிஷா ஸ்ரீ இன்டர்நேஷனல் போட்டிகளில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நிகழ்வின் போது சென்னை ஜி. ஸ்கேட் பார்க் பயிற்சியாளர் துரை உடன் இருந்தார். தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவி ஜெ.என்.நிவிஷா ஸ்ரீ, இந்த ஆண்டு தேசிய போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களில் இளம் வயது (6) வீராங்கனை என்பதும், ஏற்கனவே ஸ்கேட் போர்டு விளையாட்டில் உலக சாதனை படைத்தவர் என்பதும், இவர் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



