கன்னியாகுமரி, மே 21 –
சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 6 பேர் அதிகாலை 3 மணி அளவில் கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண காரில் சென்றனர். கன்னியாகுமரி புதுக்கிராமம் பகுதியில் கார் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து சேதம் அடைந்தது. காரின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. இருப்பினும் காரில் இருந்த 6 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின்கம்பம் சேதம் அடைந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் அதிகாலை வேளையில் இருளில் மூழ்கியது. சேதம் அடைந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.



