நாகர்கோவில், ஜன. 8 –
நாகர்கோவிலில் மாவட்டத்தின் தலைமை நீதிமன்றம் உள்ளது. நீதிமன்றத்திற்கு நேற்று இரவு மெயில் ஒன்று வந்துள்ளது. அதனை இன்று பார்த்த போது, நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்று மதியம் 1 மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து உடனடி தலைமை நீதிபதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் கோட்டாறு போலீசார் மற்றும் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு வந்து, நீதிமன்றத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றினர். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் சோதனையில் எந்தவிதமான வெடிகுண்டு இருப்பது தெரியவரவில்லை. வேறு எந்த மர்ம பொருட்களும் சிக்காத நிலையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்தது போலி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் கூடி இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு அதிகமாக வந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
குமரியில் தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு அரசு கட்டிடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில் மூலமாக விடுத்து வருவது தொடர்கதை ஆகியுள்ளது.
கடந்த மாதம் தமிழக முதல்வர் இல்லத்திற்கு பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அதேபோன்று நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது குறிப்பிடத் தகுந்ததாகும்.



