பரமக்குடி, டிச. 16 –
பரமக்குடியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
பரமக்குடி ஓட்ட பாலம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய ஆக்னஸ் பசுமலை. சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அகில இந்திய அரசு பணியாளர்களுக்கான தடகளப் போட்டி 2025- 2026 பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது.
அப்போட்டியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 200 மீட்டர்க்கான ஓட்டப் போட்டியில் தமிழகத்தின் சார்பாக தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் கலந்து கொண்டார். பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற தடகளப் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரது சாதனையை சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சிவமணி, பள்ளி ஆசிரியைகள், ஆசிரியர் சங்கங்கள், பொது அமைப்பினர் மற்றும் மாணவ மாணவிகளும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



