தஞ்சாவூர், மார்ச் 25 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 64 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறினார். தஞ்சாவூர் அன்பு சோலை இல்லத்தில் முதியோர்களிடம் 100% வாக்குப்பதிவு வலுவிறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்ட சபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
முதல் தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் உள்பட பல்வேறு தரப்பினரு ம் 100 சதவீதம் வாக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதாக ரூபாய் 64 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு அந்த பணங்கள் உடனுக்குடன் விடுவிக்கப்படுகிறது. தேர்தலில் 85 வயதிற்கு மேற்ப்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம். இதற்காக வீடு தேடி வரும் அலுவலர்களிடம் 12டி என்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 85 வயதிற்கு மேற்ப்பட்ட முதியவர்கள் 15 ஆயிரம் பேரும், மாற்றுத் திறனாளிகள் 13 ஆயிரத்து 500 பேரும், தபால் வாக்களிப்பதற்காக கண்டறிந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் நித்யா, மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



