குளச்சல், ஜன.25-
திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (25). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது. ஆனால் அவரது கணவர் பிரிந்து விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் நித்யா அவர் தாயார் பராமரிப்பில் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் குளச்சல் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (29) உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நித்யாவை சுரேஷ்குமார் திருமணம் செய்து கொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். பின்னர் சுரேஷ்குமார் ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதும் குழந்தைகள் இருப்பதும் நித்யாவுக்கு தெரிய வந்ததால் அவர் இரணியல் போலீசில் புகார் செய்தார். இதனால் பிரச்சனை ஏற்பட்டு மீண்டும் சுரேஷ்குமாருடன் ஒன்றாக வாழ தொடங்கினார்.
இந்த நிலையில் கடந்த 3.11. 2025 அன்று நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு மீண்டும் கணவன் மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டு நித்தியாவை சுரேஷ் குமார் வீட்டை விட்டு அடித்து துரத்தினார். இதை எடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவனுடன் தன்னை சேர்த்து வைக்க கேட்டு குளச்சல் போலீசில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்து தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு நித்யா முயன்றார்.
போலீசார் அவர்களை மீட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று சுரேஷ் குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நித்யா கைக்குழந்தையுடன் அந்த பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு சென்று அங்கு பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கினார். இதை பார்த்த பொதுமக்கள் குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சென்று நித்தியாவை மீட்டு குமாரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சுரேஷ்குமாரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கைக்குழந்தை மருத்துவமனை பாதுகாப்பு பிரிவில் உள்ளது.


