நல்லூர், டிசம்பர் 10 –
அனந்தநாடார்குடி தூய ஜெரோம் கல்லூரியில் மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு ஸ்கில் ஸ்பார்க் – 2025 என்ற புதிய திறன் மேம்படுத்தப்பட்ட ஏஐ கல்வி முறை தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் அருட்தந்தை இருதய ராஜு வெண்டி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜேம்ஸ் மற்றும் துணை முதல்வர் மில்டன் ஜோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரிய முனைவர்கள் நியூபெகின், ஜூலியட் ராணி, கிருஷ்ணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக பெரியகாடு பங்கு தந்தை அருட்பணி சாம் மாத்யூ கலந்து கொண்டு, மாணவர்களின் வேலைவாய்ப்பை எளிமையாக கையாளக் கூடிய நடைமுறை அறிவு, தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை நோக்கு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவியல் திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜெஸ்லின் சுஜி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அதன்படி பாடங்களுக்கான புத்தகங்களை பேராசிரியர் ஜோசப் இனியனும் கல்லூரி நிர்வாகமும் இணைந்து வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் ஜேம்ஸ் மற்றும் துணை முதல்வர் மில்டன் ஜோ ஆகியோர், மாணவர்களின் திறன் வளர்ச்சி, எதிர்கால நேர்காணல்களை எதிர்கொள்ள வேண்டிய முறைகள் மற்றும் ஆங்கில புலமை மேம்பாடு குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கினர். நிகழ்ச்சியை கணினி அறிவியல் துறை பேராசிரியைகள் ரோஸினா மற்றும் பிரைட் டிப்பி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.



