கோவை, டிச. 04 –
காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கிடையேயான ஐந்து பேர் பங்கேற்கும் ஆடவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சி.என். ரூபா அவர்கள் தலைமை வகித்தார்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர்.தங்கமணி மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர் திரு. இம்மானுவேல் ஷாம் பிரபாகரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பங்கேற்று முதல் இடம் பெற்ற கோவை மணி மேல்நிலைப் பள்ளி, இரண்டாம் இடம் பெற்ற கோவை ஆர்.கே.எம். மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் இடம் பெற்ற கோத்தகிரி ஐ.சி.எஸ். மேல்நிலைப் பள்ளி மற்றும் நான்காவது இடம் பெற்ற அன்னூர் ஸ்ரீ ஹயக்ரீவர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அணியினருக்கு சுழற் கோப்பை, ஷீல்டு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் திரு. மனோகரன், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. அன்பரசன் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.



