எட்டயபுரம், நவம்பர் 24 –
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பஸ் நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பஸ் நிலையம் முழுவதும் ஆங்காங்கே விரிசல் அடைந்து சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் எட்டயபுரம் பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த கன மழை காரணமாக பஸ் நிலையம் முழுவதும் நனைந்து இருந்த நிலையில் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
இதனை பார்த்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. முழுவதும் சேதம் அடைந்து விரிசலுடன் காணப்படும் பேருந்து நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் அப்பகுதி மக்களுடன் இணைந்து அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளார். பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



