கிருஷ்ணகிரி, நவ. 22 –
திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு இருநாட்கள் கிருஷ்ணகிரி அண்ணாமலையார் அன்னதான சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அண்ணாமலையார் அன்னதான சங்க மாவட்ட தலைவர் சண்முகம் கூறியதாவது: பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப விழா வரும் டிச.,3ல் நடக்கிறது. ஆண்டுதோறும் தீப விழாவின் போது எங்கள் சங்கம் மூலம் இருநாட்கள், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். அதன்படி தீபத்திருநாளான டிச.,3 மற்றும் டிச.,4 இருநாட்களும், தொடர்ந்து, 48 மணி நேரமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள துர்வாசர் கோவில் அருகில் உள்ள மைதானத்தில், அன்னதானம் நடக்கிறது. இதில், 400 சமையல் காரர்கள் மற்றும், 300 தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்கள் அனைவரும் எந்நேரமும் இங்கு வந்து சாப்பிட்டு செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.அன்னதான இடத்தில் கடந்த, 19ல். பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து வரும், 30லேயே சமையல் குழுவினர் அங்கு செல்வர். எனவே வரும் டிச.,3 மற்றும் 4 தேதிகளில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிருஷ்ணகிரி அண்ணாமலையார் அன்னதான சங்கத்தின் மூலம் வழங்கும் அன்னதானத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.



