நாகர்கோவில், நவ. 5 –
அனைத்து நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் தினம் வருடந்தோறும் டிசம்பர் 3 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் செவித்திறன் பாதிக்கப்பட்டோர்கள், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்கள், குறைந்தளவு பார்வை பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்கள், கைகள் பாதிக்கப்பட்டோர்கள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஓட்டப்பந்தயம், நின்று நீளம் தாண்டுதல், உருளைக்கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல், வட்டுத்தட்டு எறிதல் உள்ளிட்ட 22 வகையான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான இந்த போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்: மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை நடத்தி, அதில் வெற்றி பெற்று முதல் இடம் பிடிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். இப்போட்டியில் சுமார் 23 சிறப்பு பள்ளிகளில் இருந்து மொத்தம் 210க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களுக்கு நிகராக போட்டிகளில் வெற்றிப்பெற்று சாதிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன் என கூறினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.



