தூத்துக்குடி, அக். 15 –
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் சார்பில் வருகிற 27-ந் தேதி முதல் 31-ந் தேதி மும்பையில் இந்திய கடல்சார் வார விழா-2025 என்ற தலைப்பில் வர்த்தக மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கான விளக்க கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய கடல்சார் துறையின் முன்னேற்றம், பசுமை வளர்ச்சி திட்டங்கள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், கொள்கை முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச கடல்சார் சமூகத்துக்கு விளக்கும் வகையில் இந்திய கடல்சார் வாரம் – 2025 வர்த்தக மாநாடு நடக்கிறது.
இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1 லட்சம் வர்த்தக பிரதிநிதிகள், 500-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட உலகளாவிய கடல்சார் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவில் உள்ள 12 பெரிய துறைமுகங்கள் மற்றும் தனியார் துறைமுகங்கள் பங்கேற்கின்றன.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகமும் இந்த மாநாட்டில் பங்கேற்று துறைமுகத்தின் வளர்ச்சி திட்டங்கள், தொழில் வாய்ப்புகள், பசுமை முயற்சிகள் உள்ளிட்டவற்றை விளக்க உள்ளது. இந்த மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
இதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு மட்டும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஈர்த்து கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். இந்திய கடல்சார் துறை வளர்ச்சியில் இந்த மாநாடு மிக முக்கிய பங்கு வகிக்கும். எனவே, மாநாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த ஏற்றுமதி, இறக்குமதியாளர்களும் பங்கேற்று தங்களது பங்களிப்பை வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.



