களியக்காவிளை, அக்.12-
களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியை சார்ந்தவர் அகிலேஷ் நாடார் மகள் ஜெகதீஷ் குமாரி என்ற டாடா (50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஜெகதீஷ் குமாரிக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு. இவர்கள் வசதியான குடும்பத்தை சார்ந்தவர்கள் . தற்போது ஜெகதிஷ் குமாரி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 77 பவுன் தங்க நகைகளை இரண்டு செம்பு குடங்களில் வைத்து வீட்டில் வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெகதிஷ் குமாரி அறை சாவி மாயமானது. இதையடுத்து அவர் அறை கதவை உடைத்து பார்த்த போது, அங்கிருந்த தங்க நகைகள், செம்பு குடங்கள் மாயமாகி இருந்தது. இது குறித்து ஜெகதிஷ் குமாரி களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அப்பகுதி சி.சி.டி.வி.கேமாரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை ஏ.டி.எஸ்.வி.ரத்தின குமார் தலைமையில் கைரேகை பதிவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் நித்திரவிளை பகுதியை சார்ந்த ஸ்டாலின் (31) என்பவர் திருடியது தெரிய வந்தது. அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் நகை திருடியது ஒப்பு கொண்டுள்ளார். திருட்டு நகைகளை மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட புகை கடைகளில் பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்கியுள்ளார். போலீசாரின் அதிரடி செயல்பாட்டில் 77 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகை திருட்டில் ஈடுபட்ட ஸ்டாலின் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2018-ம் ஆண்டு பி.எஸ்.எப் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட போது வேலைக்கு செல்லவில்லை. தனியார் ஆட்டோ ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளேன். கொத்தனார் வேலை செய்து வந்தேன். எந்த தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆகவே திருட்டு தொழிலில் ஈடுட்டேன். தற்போது போலீசில் சிக்கி கொண்டேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளான். கைது செய்த திருடனை சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்த நகைகளை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



