நாகர்கோவில், ஜூன் 24 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அளிப்பதற்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தருகின்றனர். வழக்கமாக பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி வரை பொதுமக்கள் ஆட்சியரை சந்தித்து மனுக்களை வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது ஆட்சியரை சந்திப்பதற்காக பொதுமக்கள் தரப்பில் இரண்டு பேருக்கு மேல் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் விஐபிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நெருக்கமான நபர்கள் எத்தனை பேர் வந்தாலும் அனுமதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், மாவட்ட ஆட்சியரின் உதவியாளர், தபேதார் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்குவதாகவும், இதனால் தொலைதூர பகுதிகளில் இருந்து பல மணி நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் ஆட்சியரை நேரில் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் விஐபிகளுக்கு ஒரே விதமான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும், மனு அளிக்க வரும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


