நாகர்கோவில், மார்ச் 16 –
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்க வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ உத்தரவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டர்மான அழகுமீனா வெளியிட்டு உள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆபிரகாம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பிரபாவதி, குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு இளநிலை பயிற்சி அலுவலர் (அரசு ஐடிஐ) வெங்கடேஷ், பத்மநாபபுரம் தொகுதிக்கு உதவி வேளாண்மை அலுவலர் ஸ்டீபன், விளவங்கோடு தொகுதிக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் விபின் ராஜ், கிள்ளியூர் தொகுதிக்கு உதவி வேளாண் சந்தைப்படுத்துதல் அலுவலர் சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினருடன் தலா ஒரு வீடியோகிராபர் மற்றும் பிரத்யேக வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதையும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களையும் இந்த குழுவினர் வீடியோ பதிவு மூலம் கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகளை தொடங்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


