தஞ்சாவூர், செப்டம்பர் 11 –
இந்தியாவிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் பேர்கள் வந்துள்ளனர் என்றார் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சென்னை மண்டல உதவி இயக்குனர் எஸ். பத்மாவதி.
தஞ்சாவூரில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் பயலரங்கத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம், தஞ்சாவூர் பெரிய கோயில், நவகிரக கோவில்கள் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் பெரிய கோவில் ரூபாய் 25 கோடி மதிப்பில் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பொருள் விளக்க மையம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இவர்களில் 11.61 லட்சம் பேர் தமிழ்நாட்டில் சுற்றி பார்த்தனர். இதே போல தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகள் 3.06 கோடி பேர் வந்து சென்றனர். சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றார் பத்மாவதி.
இதைத்தொடர்ந்து நபார்டு உதவி பொது மேலாளர் விஸ்வந்த் கண்ணா, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் பிரிவு தென் மண்டல தலைமை இயக்குனர் (பொ) பழனிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த உச்சி மாகாளி, முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் ஆகியோர் பேசினார்கள். முன்னதாக சென்னை பத்திரிக்கை தகவல் பிரிவு இயக்குனர் அருண்குமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக துணை இயக்குனர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.



