நாகர்கோவில், மார்ச் 23 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வைப்பறையில் உள்ள மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களை, சட்டமன்ற தொகுதி வாரியாக கணினி மூலம் முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது: கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு போன்ற சட்டமன்ற தொகுதி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு மொத்தம் 1914 வாக்குச்சாவடிகளுக்கு 2295 வாக்குச்சீட்டு இயந்திரம், 2295 கட்டுப்பாட்டு இயந்திரம், 2485 காகித தணிக்கை சோதனை இயந்திரங்களை கணினி மூலம் முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் இயந்திரங்கள் செயலற்று இருந்தால், அவற்றிற்கு மாற்றாக பயன்படுத்த 381 வாக்குச்சீட்டு இயந்திரம், 381 கட்டுப்பாட்டு இயந்திரம், 571 காகித தனி சோதனை இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
நடைபெற்ற கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



