தக்கலை, மார்ச் 16 –
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரளா மாநிலம் கொல்லத்துக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று 48 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பஸ் இன்று அதிகாலை நாகர்கோவில் ஆம்னி பஸ் நிலையத்தில் வந்து அங்கு 14 பயணிகள் இறங்கியுள்ளனர். அங்கிருந்து திருவனந்தபுரம் நோக்கி பஸ் புறப்பட்டது.
தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த பஸ் எதிரே நாகர்கோவில் நோக்கி சென்ற பைக் மீது மோதி தள்ளி விட்டு நிற்காமல் அப்பகுதியில் உள்ள ஆற்றுக்குள் பஸ் பாய்ந்தது. இந்த விபத்தில் பைக்கில் வந்த சிதறல் பகுதியை சேர்ந்த விஜய் (28) மற்றும் புதுக்கடை அருகே பைங்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் (41) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இதற்கு இடையே ஆற்றுக்குள் பாய்ந்து பஸ்சில் பயணித்த 28 பயணிகள் வெளியில் வர முடியாமல் அபய குரல் எழுப்பினார்கள். உடனடியாக அக்கம் பக்கத்தினர் பஸ்ஸில் இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பின்பக்க அவசரக்கதவு கண்ணாடியை உடைத்து பஸ்சில் இந்த பயணிகளை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக பஸ்ஸில் வந்த டிரைவர் உட்பட 28 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பைக்கில் பலியான விஜய், சுரேஷ் உடலை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலியான விஜய்க்கு திருமணம் ஆகி நிறை மாத கர்ப்பிணி மனைவி உள்ளார். சுரேஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளார்.
விபத்து குறித்து அறிந்தது மாவட்ட கலெக்டர் அழகு மீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



