கோவை, செப்.18.
கோவை சிங்காநல்லூர் மற்றும் பொள்ளாச்சியில் 2 எலும்பு முறிவு மருத்துவமனைகள், சரவணம்பட்டி மற்றும் சத்தியமங்கலத்தில் 2 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் என மொத்தம் 400 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வரும் டாக்டர் முத்தூஸ் மருத்துவக் குழுமம், சரவணம்பட்டி மருத்துவமனையில் 3 புதிய மருத்துவத் துறைகளை தொடங்கியுள்ளது.
சரவணம்பட்டியில் உள்ள முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அழகியல் மருத்துவம், பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை, அதிநவீன காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை ஆகிய 3 புதிய துறைகள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மருத்துவக் குழுமத்தின் சேர்மன் டாக்டர் முத்து சரவணகுமார் தலைமை தாங்கி புதிய பிரிவுகளைத் திறந்து வைத்தார்.
விழாவில் அகில இந்திய காஸ்மெட்டிக் சர்ஜரி சங்கத் தலைவர் ஜேம்ஸ் ராய் கஞ்சூர், லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின், ரிங்கி ஷா, லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் பி.எஸ். செல்வராஜ் மற்றும் அவரது துணைவியார் ஜெயந்தி செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
புதிய துறைகளின் முக்கியத்துவம் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள நவீன சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் ஜனனி, கோகுல் பாலாஜி மற்றும் நாகநந்தினி ஆகியோர் விளக்கினர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பிரிவுகள் தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு கட்டணச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



