நாகர்கோவில், ஏப். 18 –
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ இன்று பட்டகசாலியன் விளையில் இருந்து காலையில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவருடன் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பிரச்சாரத்தில் கலந்து கொண்ட எம் ஆர் காந்தி எம்எல்ஏ பேசியதாவது: தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியை பிரதமர் நேரடியாக கண்காணிக்கிறார். இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் தாமரை வெற்றி பெறச் செய்ய நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தாருங்கள். உங்கள் வாக்குகளை தாமரை சின்னத்திற்கு அளித்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்றிருக்கிறேன். எந்த நேரத்திலும் மக்கள் என்னை வந்து சந்திக்கலாம் என்பது அனைவருக்கும் தெரியும். மாணவர்களுக்கு கல்வி கடன் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு ஓடோடி சென்று குரல் கொடுத்தவன் நான். இந்த தொகுதியில் ஐடி பார்க் வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி முதல் அமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று, தற்போது ஐடி பார்க் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு அந்த பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் கூடுதலாக வேலை வாய்ப்பு இந்த தொகுதியில் உருவாக்க வேண்டும். அதற்காக பாரதி ஜனதா அதிமுக கூட்டணிக்கு வாக்குகளை தாருங்கள். பிரதமரின் வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், ஜல் ஜீவன் போன்ற திட்டங்களால் எண்ணற்ற பயனாளிகள் பயனடைந்துள்ளனர். நாகர்கோவில் தொகுதியில் போக்குவரத்து பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாற்றுத்திட்டங்கள் கொண்டுவர வேண்டும்.
நாகர்கோவிலில் புற நகரில் பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுப்பேன். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பஸ் நிலைய பணிகள் அமைக்கப்படும். ரயில் நிலையத்திலிருந்து எளிதில் பஸ நிலையம் வந்து செல்ல புதிய புதிய பஸ் வசதி செய்யப்படும். வலம்புரி விளை குப்பை கிடங்கு பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசி வந்துள்ளேன். இந்த தொகுதி முழு வளர்ச்சி பெற தாமரைக்கு வாக்குகளை தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.



