நாகர்கோவில், ஜூலை 10 –
நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்பு அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர் விசாரணையில் ரெயில் தண்ட வாளத்தில் பிணமாக கிடந்த அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவருக்கு சுமார் 45 வயது இருக்கும். சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்ததால், அவர் அந்த வழியாக ஏதே ஒரு ரெயில் வரும்போது தண்ட வாளத்தில் படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ரெயிலில் சிக்கி பலியான அந்த நபரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


