தஞ்சாவூர், ஜூலை 6 –
பெரியார் அண்ணா கருணாநிதி ஆகியோரது திராவிடக் கொள்கையை பின்பற்றினால் தான் தமிழகத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி நடத்த முடியும் என்று ஒரத்தநாடு திமுக பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா எம்.பி கூறினார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி 103 வது பிறந்தநாள் விழா மற்றும் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி வாக்காளருக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். திமுக துணை பொது செயலாளர் திருச்சி என் .சிவா எம்பி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை யை கொடுக்கவில்லை. அந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமென்று மக்கள் முடிவெடுத்து இருந்தால் 180 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவில் தான் அந்த கட்சியால் ஆட்சி அமைக்க முடிந்தது. ஆனால் பொதுவெளியில் அந்த கட்சியின் பின்னால் மக்கள் எல்லோரும் சென்று விட்டதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைய தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியிலும் திராவிட இயக்க தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கைகள் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. திராவிட கொள்கைகளை பின்பற்றி மு க ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து உத்வேகத்துடன் செயல்பட்டு வரும் தேர்தலில் அமோக வெற்றியை பெறுவதற்கு திமுகவினர் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்ச ரும் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ யுமான ஆர். வைத்திலிங்கம் முன்னாள் எம்எல்ஏ க்களான எம் ராமச்சந்திரன், கே டி மகேஷ் கிருஷ்ணசாமி, டி கே ஜி நீலமேகம், சி. ராஜேந்திரன், மாவட்ட தி.மு.க பொருளாளர் எல் ஜி அண்ணா, தஞ்சாவூர் மாநகராட்சி (பொறுப்பு) மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், ஒரத்தநாடு ஒன்றிய திமுக செயலாளர் முருகையன், ரமேஷ் குமார், தலைமைக் கழக பேச்சாளர் கலைமணி இளய பாரதி வரகூர் காமராஜ், விஸ்வ லிங்கம், தஞ்சாவூர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய திமுக செயலர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக ஒரத்தநாடு பேரூர் திமுக செயலர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.



