தருமபுரி, ஏப்ரல் 03 –
தருமபுரி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), சம்பத் குமார் (அரூர் தனி), மரகதம் வெற்றிவேல் (பாப்பிரெட்டிப்பட்டி), பாமக வேட்பாளர்கள் சௌமியா அன்புமணி (தருமபுரி), பாடி செல்வம் (பென்னாகரம்) ஆகியோரை ஆதரித்து தருமபுரி வள்ளலார் திடலில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசியதாவது: தருமபுரி மாவட்டம் அதிமுகவின் கோட்டை கடந்த 2021 – ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணி தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆண்டாலும், தருமபுரி மாவட்டத்தை அதிமுக மற்றும் பாமக தான் ஆண்டது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மாவட்டத்தில் அதிமுக, பாமக வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். திமுக கூட்டணி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. கஞ்சா பழக்கம் அதிகரித்ததால் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இந்த கொடுமையான ஆட்சி தேவையா? திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு , வீட்டு வரி உயர்வு என அனைத்து வரிகளும் உயர்ந்துள்ளன. கழிப்பறை பராமரிப்பில் கூட ஊழல் செய்தது திமுக அரசு. ஆனால் இந்தியாவிலேயே முதன்மை அரசு என்று முதலமைச்சர் கூறுகிறார். கடன் வாங்குவதில் தான் இந்தியாவிலேயே திமுக அரசு முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 73 ஆண்டுகள் பல கட்சிகள் ஆட்சி செய்து போது 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி கடன் இருந்தது, 2021ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகள் நடந்த திமுக ஆட்சியில் மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதுதான் திமுக அரசின் சாதனை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைந்த உடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.



