ஈரோடு, மார்ச் 23 –
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ந் தேதி நடக்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கந்தசாமி பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து இருந்தார். இதேபோல் மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரி சிந்துஜா மற்றும் பெண்கள் பட்டுப்புடவை அணிந்து வந்திருந்தனர். இவர்கள் கொல்லம் பாளையம் பகுதியில் உள்ள ரீட்டா பள்ளி அருகே இருந்து புறப்பட்டு வீடு வீடாக சென்றனர்.
மேளதாளத்துடன் சென்ற இவர்கள் அங்கு உள்ள வாக்காளர்களிடம் குங்குமம் சந்தனம் பூ கொடுத்து தேர்தல் நாளன்று கண்டிப்பாக வாக்காளர்கள் அனைவரும் வாக்கு சாவடிக்கு சென்று உங்களுடைய வாக்கை பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வித்தியாசமான முறையில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகளை பொது மக்கள் அன்புடன் வரவேற்று கண்டிப்பாக நாங்கள் அனைவரும் வாக்களிக்கிறோம் என்று உறுதி அளித்தனர்.
இது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி கந்தசாமி கூறும் போது: கடந்த தேர்தலில் எந்த பகுதியில் வாக்குப்பதிவு குறைவாக இருந்ததோ அந்த பகுதியை கண்டறிந்து மக்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் வித்தியாசமாக தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். இதன் படி கொல்லம்பாளையம் பகுதியில் ஒரு குடும்பத்தில் திருமணம் நடக்கும் போது அல்லது எதாவது விசேஷம் நடக்கும் போது மக்களை அழைப்பது போல மேளதாளத்துடன் பாரம்பரிய உடையுடன் சென்று வாக்காளர்களுக்கு குங்குமம் சந்தனம் பூ கொடுத்து தாம்பூல தட்டில் திருமண அழைப்பிதழ் போல அச்சடிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வைத்து பொது மக்களிடம் கொடுத்து ஏங்க கண்டிப்பாக ஓட்டுப்போட வாங்க என்று ஒவ்வொருவரையும் அழைக்கிறோம் என்று கூறினார்.



