குளச்சல், ஏப். 6 –
வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் அஜித் (20). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அஜித் வெள்ளிச்சந்தை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த அனித் (26) என்பவர் அஜித்தை வழிமறித்து, கத்தியை காட்டி செலவுக்கு பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பின்னர் அஜித் சட்டை பையில் இருந்த 470 ரூபாய் பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இது குறித்து அஜித் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பணம் பறித்த அனித் மீது வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் அனித் மீது ஏற்கனவே 5 வழக்கு நிலையில் உள்ளதும், இவர் பிரபல ரவுடி என்பதும், வெள்ளிச்சந்தை காவல் நிலைய குற்ற சரித்திர பதிவேடு பட்டியலில் உள்ளவர் என்பதும் தெரிய வந்துள்ளது.


