சேலம், ஜுன் 29 –
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் இருந்து விவசாயம், சொந்த வீட்டு உபயோகம், மண்பாண்டம் தயாரிக்க வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க சேலம் மாவட்டத்தில் உள்ள 322 நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண்/ களிமண் போன்றவற்றை வெட்டி எடுத்து பயன்படுத்திக் கொள்ள தகுதி வாய்ந்த நபர்களை கண்டறிந்து சேலம் மாவட்ட அரசிதழ் நிர்வாகம் சிறப்பு வெளியீட்டின்படி பிரசுரம் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். இதற்கு ஏதுவாக மேற்கண்ட ஏரிகளின் விவரங்களை இ – சேவை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அனுமதி கோரி வரப்பெறும் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் மீதும், நிலுவையில் உள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் மீதும் அரசின் நிலையான இயக்க செய்முறையை பின்பற்றி எவ்வித சுணக்கம் இல்லாமலும், காலதாமதம் இல்லாமலும் விரைந்து அனுமதி வழங்க கூடிய வகையில் அனைத்து வருவாய் வட்டாட்சியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி பெற விவசாயத்திற்காக நஞ்சை நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர்/ 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் கன / 30 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தயாரிக்க 60 கன மீட்டர் /20 டிராக்டர் லோடுகளும், சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர்/ 10 டிராக்டர் ரோடுகளும் இலவசமாக வழங்கப்படும்.
நீர்நிலை கட்டுப்பாட்டு மற்றும் பராமரிப்பு அலுவலர்களுக்கான நீர்வளத்துறை (பொ.ப.து) ஊரக வளர்ச்சி/ பஞ்சாயத்து ராஜ் அலுவலரால் வரையறுக்கப்பட்ட பகுதியில் நீர்நிலைப் பொறுப்பு அலுவலர்கள் சுட்டிக்காட்டும் பகுதியில் இருந்து மட்டுமே மண் வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்படும். அனுமதிதாரர் தனக்கு அனுமதி வழங்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து அவர்கள் சொந்த செலவில் டிராக்டர் வாகனத்தை மட்டுமே கொண்டு கனிமத்தை அனுமதிக்கப்பட்ட பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவு வண்டல் மண்/ களிமண்ணை வெட்டி எடுத்து செல்லலாம். இதை தவிர லாரி, டிப்பர் லாரி மற்றும் கனரக வாகனங்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது. வண்டல் மண் / களிமண் வெட்டி எடுக்கும் பகுதியானது கரையின் அடிப்பகுதியிலிருந்து கரையின் உயரத்தை போல் குறைந்தது இரண்டு மடங்கு தொலைவிற்கு அப்பால் இருக்க வேண்டும். ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேல் வண்டல் மண்/ களிமண்ணை வெட்டி எடுக்கக் கூடாது. நில உரிமையாளர்கள் சொந்த வீட்டு உபயோகத்திற்காக பெறும் அனுமதியானது வணிக நோக்கிலோ, லாபம் ஈட்டும் வியாபார நோக்கிலோ பயன்படுத்தக்கூடாது. வீடு கட்டுதல், பள்ளங்களை சமன்படுத்துதல், சொந்த பாதைகள் அமைத்தல் போன்ற பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.
ஏரிகளின் கரைகள் நெடுகிலும் அங்கீகரிக்கப்பட்ட சாலை அல்லது வண்டி பாதை அமைந்திருந்தாலன்றி மற்றபடி கனிமம் கொண்டு செல்லும் வாகனங்கள் கரையைப் பாதையாக பயன்படுத்தக் கூடாது. வாகனங்கள் சென்றுவர கரைகளை வெட்டி சேதப்படுத்தி பாதை அமைக்க கூடாது. அகற்றப்பட்ட மண்ணை நீர்த்தேக்க பகுதியில் அல்லது ஏரியின் உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதியில் மற்றும் மதகு கல் கட்டுமான பணிகள் படுகை பாலங்கள் ஆகியவற்றில் குவித்து வைக்க கூடாது. வாகனங்கள் ஏரிகளின் சுவர் மதகு அல்லது கல் கட்டுமானங்களுக்கு யாதொரு பகுதியையும் தொட்டு செல்லவும் அதன் மூலம் சேதம் விளைவிக்க கூடாது. ஏரிகளில் தண்ணீர் இல்லாத இடங்களில் நீர்நிலை கட்டுப்பாட்டு அலுவலரால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் மண் வெட்டி எடுக்க வேண்டும். அனுமதி தாரர் அனுமதிக்கப்பட்ட பகுதியில் வெட்டி எடுத்து வெளியில் அனுப்பும் கனிமத்திற்கு உரிய கணக்குகளை நீர் நிலை கட்டுப்பாட்டு ஊரக வளர்ச்சித் துறை/ நீர்வளத்துறை அலுவலர்களால் உரிய பதிவேட்டில் விவரங்கள் எழுதி தினசரி விவரப்பட்டியலை தயாரித்து அதனை மாவட்ட ஆட்சியருக்கு தினமும் சமர்ப்பிக்க வேண்டும். பாசன மடையின் அடிமட்டத்திற்கு கீழ் மண் எடுக்க அனுமதி இல்லை.
மேலும் இந்த நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் வண்டல் மண் மற்றும் களிமண் ஆகிய இரு கனிமங்களை வெட்டி எடுக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதோடு அபராத நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப் படும். ஏரிகளின் அணுகு சாலை மற்றும் கட்டமைப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அவற்றுக்கான இழப்பீடு அனுமதி பெற்ற அனுமதிதாரிடம் இருந்து வசூல் செய்யப்படும். மேலும் ஏரிகளுக்கு ஏற்பட்ட சேதத்தை சீரமைப்பதற்கு அரசினால் ஏதேனும் தொகை செலவிடப்பட்டிருந்தால் அந்த தொகையும் அனுமதிதாரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.
எனவே விவசாய பயன்பாடு, மண்பாண்ட தொழில் செய்வோர் மற்றும் சொந்த வீட்டு உபயோகம் ஆகியவற்றிற்கு வண்டல் மண் /களிமண் போன்றவற்றை இலவசமாக வெட்டி எடுத்து செல்ல விரும்பும் பயனாளர்கள் அருகில் உள்ள இ – சேவை மையங்களில் தேவையான ஆவணங்களுடன் இணையதள வழியில் விண்ணப்பம் செய்து உரிய அனுமதி பெற்று மேற்கண்ட நிபந்தனைகளை முறையாக பின்பற்றி திட்டத்தினை சிறப்புற பயன்படுத்தி தங்களது தேவைகளை மேம்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.


