வேலூர், பிப். 04 –
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, மலட்டாறு படுகையில் நடைபெறும் தொடர் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். உதயகுமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பேரணாம்பட்டு தாலுகா, குண்டலப் பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அத்திக்குப்பம், சிவனகிரி, குடிப்பள்ளி, குண்டலப்பள்ளி போன்ற பகுதிகளில் பாயும் மலட்டாறு படுகையில், மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாகத் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் தொடர் மணல் கொள்ளையினால் அப்பகுதியில் உள்ள தடுப்பணை சேதமடைந்து வருகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், பஞ்சாயத்து பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போனதால் விவசாயத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள், அதனைத் தடுக்கும் விவசாயிகளின் நிலங்களுக்குள் புகுந்து தேங்காய், மாம்பழம் மற்றும் மின் மோட்டார் ஒயர்களைத் திருடிச் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பிற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
ஆனந்தகிரி சோதனைச் சாவடி வழியாக முக்கியப் பிரமுகர்கள் வரும் நேரத்தில், காவல் துறையினரின் கவனம் திசைமாறும் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய சமூக விரோதச் செயல்கள் தடையின்றி நடைபெறுகின்றன.
எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, ஆனந்தகிரி சோதனைச் சாவடியில் கூடுதல் காவலர்களை நியமித்து, மலட்டாறு படுகையில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



