கோவை, மே 07 –
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு சுவிட்சர்லாந்தின் ‘கெர்ஸி’ மற்றும் சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழு கூட்டம் கோவையில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, சிஐடி ஐ தலைவர் அஸ்வின் 2030ம் ஆண்டிற்குள் இந்திய ஜவுளித் துறையின் வர்த்தகத்தை 350 பில்லியன் டாலராகவும்,ஏற்றுமதியை 100 பில்லியன் டாலராகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால், தற்போது பருத்தி மீது விதிக்கப்பட்டுள்ள 11% இறக்குமதி வரி,இந்திய ஜவுளித் துறையின் போட்டித்திறனை உலக சந்தையில் கடுமையாகப் பாதித்து வருகிறது. பருத்தி விவசாயிகள் மற்றும் ஆலைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) உலக சந்தை விலையை விட சற்று குறைவான விலையில் ஆலைகளுக்கு பருத்தியை வழங்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
மேலும் சீனா போன்ற நாடுகளில் உள்ளது போல, இந்தியாவிலும் ஆலைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மூன்று மாத கால பருத்தியை கையிருப்பில் வைத்திருக்க அரசு சுமார் 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சுமார் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இத்துறை, கடந்த நிதியாண்டில் ஏற்றுமதியில் 2.2 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் பருத்தித் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஏற்றுமதி வருவாய் 35.79 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. பாரதப் பிரதமரின் 5எஃப் தொலைநோக்குப் பார்வையை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டுமானால் தரமான பருத்தி உற்பத்தி, நிலையான விலைக் கொள்கை மற்றும் முறையான வரி விலக்கு ஆகிய அம்சங்களில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.



