நாகர்கோவில், அக். 27 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோயில் மாநகர மேயர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் யாருக்காவது கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் மேடையில் வந்து பேசலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். அதை ஒட்டி மேடைக்குச் சென்று பேசிய திமுக முன்னாள் குளச்சல் நகர செயலாளரான குளச்சல் நகராட்சி கவுண்சிலருமான ரஹீம் நீண்ட காலமாக கட்சியில் அங்கம் வகிக்கும் தன்னை போன்றவர்கள் ஒதுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். அவர் இக்கருத்தை பேசிய உடனே அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் கூட்டத்தில் பங்கேற்று இருந்தோர் அரங்கம் அதிரும் வகையில் பலமாக கைதட்டினர்.
இதனால் மேடையில் இருந்த சில நிர்வாகிகள் முகம் சுளித்த நிலையில் சலசலப்பு ஏற்பட்டது. திடீரென கவுண்சிலர் ரஹீமை தொடர்ந்து பேச அனுமதிக்காத நிர்வாகிகள் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்ளை அரங்கத்தை விட்டு வெளியேற்றினர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.



