நாகர்கோவில், நவம்பர் 6 –
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடந்தது. இதில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குமரி மாவட்டம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடந்தது. 13 வயது குட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஆண், பெண் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மிதிவண்டி போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்திலேயே நடத்தப்பட்டது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அதிகாரி வினு தொடங்கி வைத்தார். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடத்தை பெற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், 2ம் இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம், 3ம் இடத்தை பிடித்தவர்களுக்கு 2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ. 250 என அறிவிக்கப்பட்டு அவரவர் வங்கி கணக்கில் வரவைக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


