விளாத்திகுளம், அக்டோபர் 20 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரகாளியம்மன் கோவிலின் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அளவில் நடைபெற்ற மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கபடி அணிகள் மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அணிகள் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி கபடி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சியினருடன் அமர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியை கண்டு களித்தார்.
இந்நிகழ்வில் அதிமுக புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, புதூர் அதிமுக நகரச் செயலாளர் ஆண்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் மோகன், சிறுபான்மை பிரிவு சதீஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் விழாக் கமிட்டியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



