சிவகங்கை, 22.08.2026.
காரைக்குடி உட்கோட்டம், சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளமணக்குடி பகுதியில் ரவிக்குமார் (48) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி உடல்நலக்குறைவால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், 12 வயது மகன் கிருத்திக் ரோஷனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் வசித்து வந்த ரவிக்குமாரை அங்கு தங்கக்கூடாது என அவரது தாயார் வள்ளிக்கண்ணு மற்றும் உறவினர் கலைச்செல்வி பாஸ்கரன் ஆகியோர் கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புகார் தொடர்பான விசாரணையின்போது காவல் ஆய்வாளர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, ரவிக்குமாரை வீட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரித்ததாகவும், இல்லையெனில் கைது செய்ய நேரிடும் என தெரிவித்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால் மனமுடைந்த ரவிக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியான நிலையில், காரைக்குடி ஏ.எஸ்.பி. ஆஷிஷ் புனியா காவல் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் உறவினர்கள் ஆய்வாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் மனு அளித்தனர்.
புகார் மனு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.எஸ்.பி. உறுதியளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



