நாகர்கோவில், ஏப். 7 –
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை மற்றும் கன்னியாகுமரி ஜவான்ஸ் நலசங்கம் இணைந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இந்த விழிப்புணர்வு பேரணியை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் வந்து, கடைசியாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.
பேரணியின் போது “எனது வாக்கு விற்பனைக்கல்ல” மற்றும் “அனைவரும் வாக்களிப்போம்” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பேரணியில் கலந்துகொண்ட இராணுவ வீரர்கள் வரும் வழிகளில் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் ராணுவ வீரர்களின் பங்களிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பேரணியை கலெக்டர் அழகுமீனா வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், முன்னாள் இராணுவ வீரர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



