மார்த்தாண்டம், மே 13 –
மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மதுபான கடைகள் இருந்தால் இரண்டு வார காலத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டது.
மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 மீட்டரில் தனியார் காம்ப்ளக்ஸில் மதுபான கடை எண் 4831 இயங்கி வருகிறது. பக்கத்தில் பார் உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் தனியார் ஆஸ்பத்திரி, பஸ் ஸ்டாண்ட், தொடக்கப்பள்ளி, மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் உள்ளது. மாலை வேளையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் இந்த டாஸ்மார்க் கடையை கடந்து செல்வது வழக்கம்.
இந்த டாஸ்மார்க் கடை ஊரின் முகப்பு பகுதியில் உள்ளது இதை மூட வேண்டும் என நல்லூர் சாத்தானாங்குழி டாக்டர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவுடன் இந்த டாஸ்மார்க் கடை முன் பகுதியில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்ஆசை தம்பி தலைமை வகித்தார். வர்த்தக சங்க மாநில நிர்வாகி கருங்கல் ஜார்ஜ், அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை தலைவர் கமலதாஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் பிரின்ஸ், மற்றும் நிர்வாகிகள் ஜோதி லிங்கராஜ், மேரி விஜயா, ஜானகி, கண்ணன் உட்பட ஏராளமான பெண்கள் குழந்தைகள் பங்கேற்றனர். மார்த்தாண்டம் நகர வர்த்த சங்கமும் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த டாஸ்மார்க் கடை, பார் நிரந்தரமாக மூடப்பட்டது.



